
சென்னை:
அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு விவகாரத்தில், தமிழக அரசின் புதிய விதிமுறைகளின்படி பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். அத்துடன் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தமிழக அரசு, தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22(ஏ)-ல் திருத்தம் கொண்டு வந்து, அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ‘அங்கீகாரம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இருப்பினும், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்ய பத்திரப்பதிவு செய்யலாம்’ என்று கூறியிருந்தது.
இந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் எவ்வாறு வரையறை செய்யப்படும் என்பது குறித்து விதிமுறைகளை உருவாக்கி, அதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரையறை செய்தும் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி, 2 அரசாணைகளை கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. இந்த அரசாணைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த அரசாணைகளை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று மனுதாரர் வாதிட்டார். அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்குரைஞர் அய்யாதுரை உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
வாதங்களைக் கேட்ட பின்னர் நீதிபதிகள் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். அதில்,
தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 1908-ல் தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22ஏ-ன் கீழ், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை பிறப்பிக்கப்படும்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட விதிமுறைகள் நடைமுறையிலும் இல்லை. அதே நேரம், குழந்தைகளின் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய முடியாமல் பலர் தவிக்கின்றனர் என்று எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், “தமிழ்நாடு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதிகள் 2017” என்ற புதிய விதியை தற்போது அரசு உருவாக்கி உள்ளது. இந்த விதியில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த விதிவிலக்கு செல்லாது.
தற்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள, வரையறை கட்டணம், மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தி, அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் வரையறை செய்த பின்னரே, அதை பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அதாவது, புதிய விதிமுறைகளை பின்பற்றித்தான் பத்திரப்பதிவுகளை செய்யவேண்டும். தற்போது வழங்கியுள்ள இந்த அனுமதி கூட, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதையும் தெளிவு படுத்திக் கொள்கிறோம்.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை அமலில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், செய்யப்பட்ட பத்திரப்பதிவு சட்டப்படி செல்லாதது. இந்தக் காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.
– என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




