இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்து இருந்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷனை மார்ச் 3ஆம் தேதி கைது செய்ததாக பாகிஸ்தான் காவல்துறை அறிவித்தது.
அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த வழக்கை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்தியா தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். குல்புஷன் ஜாதவ் கடத்தப்பட்டார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா ஆவணங்களை சமர்பித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஒரு உளவாளிக்கு கருணை காட்ட முடியாது என்று கூறியுள்ளது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.
தி ஹேக்கில் உள்ள பீஸ் பேலசில் நீதிபதி ரோனி ஆபிரஹாம் தீர்ப்பை வாசித்தார்.
அதில், குல்புஷன் யாதவை கைது செய்தது இன்னும் சர்ச்சைக்குள்ளாகவே இருக்கிறது.
ஆனால், குல்புஷன் யாதவ் இந்தியர்தான் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் ஒத்துக்கொண்டுள்ளது. குல்புஷன் யாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த வழக்கு நியாயமானதே.
வியன்னா ஒப்பந்தத்தின்படி, குல்புஷனுக்கு சட்ட உதவிகளை பாகிஸ்தான் அளித்து இருக்க வேண்டும். ஆதலால், குல்புஷன் யாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்திவைக்கிறேன் எனத் தீர்ப்பளித்தார்.


