அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கரூர், தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி. மாவட்ட ஆட்சியரிடம் இன்முகத்தோடு மனு கொடுத்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் படித்த முட்டாள் என்றும், கொரோனா தொடர்பான கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை என்றும் கூறினார். மேலும், என் பின்னர் 2 லட்சம் பேர் உள்ளனர்; அவர் இனி வெளியே நடக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கரூர் மாவட்ட மூத்த அதிகாரி மற்றும் முதன்மை அதிகாரியுமான மாவட்ட ஆட்சியரையே, மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல், நாடே கொரோனா வைரஸ் பயத்தில் ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தேவை இல்லாமல் நோயை உண்டு பண்ணும் விதமாக ஒன்று கூடியது, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது IPC 143, 270, 153, 294, 353, 506(2) உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் கரூர் தாந்தோனிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.