
மதுரை அலங்காநல்லூர் சுற்று வட்டாரத்தில் பூத்துக் குலுங்கும் நாவல் பூக்கள் கண்களைப் பறிக்கின்றன. நாவல் பழ சீசன் தொடங்கவுள்ளதால், உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் சரந்தாங்கி, வலையபட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 50 க்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான நாவல் மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
தற்போது இந்த வருடத்திற்கான சீசன் தொடங்கவுள்ளதால் நாவல் மரங்கள்தோறும் அதிகளவில் பூக்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளன. மேலும் இந்த மரங்கள் வறட்சியை தாங்கி பலன்தர கூடியவையாகும்.
சி வைட்டமின் சத்துள்ள நாவல் பழம், மற்றும் அதன் விதைகளில் மருத்துவ குணங்கள் பல உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கால் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், நஷ்டத்தை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்..
இதனால் ஜூன் மாத கடைசியில் அறுவடை துவங்கவுள்ள நிலையில் நாவல் பழத்திற்கு உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை


