மின் கட்டண வசூலில் குளறுபடி! பல மடங்கான கட்டணம்!

Published:

eb

தமிழகம் முழுவதும் வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது.பல மடங்கு கட்டணம் நிர்ணயித்து கொள்ளை வசூல் செய்வதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மின்வாரியத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 35 லட்சம் வணிக நிறுவனங்கள்,7 லட்சம் தொழிற்சாலைகள், 21 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 11 லட்சம் குடிசை வீடுகள் என ஒட்டுமொத்தமாக 2.75 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது.

வீடு மற்றும் தொழில்நிறுவனங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை மின்சாரம், அனல்மின்நிலைய மின்சாரம்,சோலார் மின்சாரம் மற்றும் மத்திய தொகுப்பின் மின்சாரத்தை வாரியம் பெற்று, வழங்கி வருகிறது.

இந்த மின் இணைப்புகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் வகையில், மின்வாரியம் நடைமுறையை கொண்டுள்ளது. வீடுகளில் உள்ள மின்மீட்டரில், வாரிய ஊழியர்கள் மின் பயன்பாட்டு அளவீடு (ரீடிங்) மேற்கொண்டு,கட்டணத்தை நிர்ணயித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடங்கியதும், மின் வாரியம் சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ரீடிங் எடுப்பதை நிறுத்திக் கொண்டனர். இதனால், பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயிக்காமல், முந்தைய கட்டணத்தை செலுத்தும்படி அறிவித்தனர்.

இந்நிலையில்,கடந்த மாதத்தில் (மே) இருந்து மீண்டும் மின் பயன்பாட்டை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில்,4 மாத மின் அளவை கணக்கிட்டு, அதனை 2 ஆக பிரித்து கட்டணத்தை நிர்ணயித்து செலுத்தச் சொல்கின்றனர்.

இந்த கட்டண நிர்ணயத்தில் குளறுபடி இருப்பதாக கடந்த மாதம் முதல் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வழக்கமாக வரும் கட்டணத்தை விட பலமடங்கு அதிகமாக கட்டணத்தை நிர்ணயித்து,செலுத்தச் சொல்கிறார்கள் எனக்கூறுகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

வழக்கமாக ஒரு வீட்டிற்கு 1000 முதல் 1,800 வரையில் மின் கட்டணம் வந்த இடத்தில், தற்போது 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையில் மின் கட்டணம் வந்துள்ளது. எப்படி இது சாத்தியமானது என கேட்டால், கோடை (ஏப்ரல், மே மாதம்) மற்றும் முழு ஊரடங்கு காலம் என்பதால், அதிக மின் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துள்ளது.

அதனால் தான்,கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது என பொத்தாம் பொதுவாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். இத்தகைய விளக்கத்தை மக்களால்,ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால்,தினமும் கட்டண நிர்ணய குளறுபடி தொடர்பாக மின்வாரிய அலுவலகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுகிறது.

ஆனால்,இத்தகைய புகார்களை வாரிய அதிகாரிகள்,ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. சென்னை,கோவை, மதுரை, சேலம், திருச்சி என ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கில் கட்டண குளறுபடி புகார்கள் தேங்கி கிடக்கிறது.

இதில்,மின்வாரிய குறைதீர் கூட்டங்களையும் அதிகாரிகள் நடத்துகின்றனர். அந்த கூட்டங்களில் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, மின் கட்டண நிர்ணயத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைக்கின்றனர்.

4 மாத மின் பயன்பாடு யூனிட்டை 2 ஆக பிரித்து, அரசின் சலுகையை உட்புகுத்தி கட்டணத்தை நிர்ணயித்திருந்தால், இப்பிரச்னைகள் வராது. மாறாக மின் அளவீடு மேற்கொள்ள வரும் ஊழியர்கள், தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை மின் பயன்பாட்டு அட்டைகளில் எழுதி வருகின்றனர். சில இடங்களில் யூனிட்டை குறிப்பிடாமல், தொகையை மட்டும் எழுதிச் செல்கின்றனர். மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இது குறித்து சேலம் மின்நுகர்வோர் மைய நிர்வாகி பூபதி கூறுகையில், ‘‘பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதத்தில் முதல் 2 மாதமான பிப்ரவரி, மார்ச்சில் மின் பயன்பாடு என்பது அனைவரது வீட்டிலும் குறைவாக இருக்கும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அதேவேளையில், ஏப்ரல், மே மாதத்தில் மின் பயன்பாடு, கோடை என்பதாலும், முழு ஊரடங்கு என்பதாலும் மிக அதிகளவு இருந்திருக்கும். தற்போது, இந்த 4 மாத மின் பயன்பாட்டை சரிசமமாக 2 ஆக பிரிக்கும்போது, குறைவாக பயன்படுத்திய மாதக்கணக்கில் அதிக யூனிட் போய் சேர்கிறது.

அதன்மூலம் மின் கட்டணம் மாற்றம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக சராசரியாக 500 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு கூட 600 யூனிட்டிற்கு மேல் வந்துவிடும்.

இதனால், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கிறது. கட்டண மானியமும் கிடைக்காமல் போகிறது. இதை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து வருகிறோம். ஆனால்,மின்வாரியம் தரப்பிலோ, இவ்விஷயத்தில் ஒன்றும் செய்யாமல் மவுனமாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, கட்டண நிர்ணய குளறுபடியை அரசு நீக்க வேண்டும். இதை மனுவாக சேலம் மேற்பார்வை பொறியாளரிடம் கொடுத்திருக்கிறோம்,’’ என்றார்.

விதிமீறல் இல்லையென அதிகாரிகள் விளக்கம்
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘100 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால், 101 முதல் 200 வரை ஒரு யூனிட்டுக்கு 1.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 200 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதுவே 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால், 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 3.50ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 4.60ம், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6.60ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஊரடங்கினால் மார்ச் மாதம் எடுக்க வேண்டிய மின்சார பயன்பாட்டு அளவை ஊழியர்கள் எடுக்கவில்லை. அந்த நிலையில் முந்தைய மாதங்களில், சம்பந்தப்பட்ட நுகர்வோர் பயன்படுத்திய அளவை கணக்கிடுவது வழக்கம்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அரசும், மின்வாரியமும் கண்டு கொள்ளவில்லை
மின் பயன்பாடு அளவீடு எடுக்கப்பட்ட அனைத்து மின் நுகர்வோரும், தங்களுக்கு வழக்கத்தை விட மிக அதிகளவு மின்கட்டணம் வந்துள்ளது என்று தான் கூறுகின்றனர்.

ஆனால், மின்வாரியமோ, நாங்கள் சரியாக தான் கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கிறோம் என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் ஏன் அனைத்து தரப்பு மக்களும் வாரியம் நிர்ணயித்த கட்டணத்தில் குளறுபடி என்றும், அதிகம் என்றும் கூறுகிறார்கள்.

இதை பரிசீலிக்க வேண்டிய அரசும், வாரியமும் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஊரடங்கு காலத்தில் மக்கள் மீது சுமத்தப்படும் மிகப்பெரிய சுமையாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பதும் நுகர்வோர் அமைப்புகளின் குமுறல்.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஒரு மின்நுகர்வோரின் வீட்டில் கணக்கெடுத்த மின் ஊழியர், பயன்பாட்டு அட்டையில் மின் அளவை குறிப்பிடாமல், கட்டண தொகையை மட்டும் எழுதிச் சென்றுள்ளார். அதுவும் பன்மடங்கு அதிகமாக குறிப்பிட்டுள்ளார்.

வேறு வழியின்றி, அந்த நுகர்வோர் அத்தொகையை செலுத்தியுள்ளார். அந்த அட்டையில், பிப்ரவரி கணக்கெடுப்பில் 860 கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 4 மாதத்திற்கு பின் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 11,874 கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related articles

Recent articles

spot_img