மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
சுனாமி போன்ற இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று உருவாகியுள்ளதால் இன்னும் ஓராண்டிற்கு பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப் பிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மதுரையில் கொரானா தடுப்பு பணிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் கொரானா பாதிப்பு 4000 ஐ கடந்த நிலையில் சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன், ஆட்சியர், ஆணையாளர், அரசு மருத்துவமனை முதல்வர் என அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன்…
மதுரையில் கொரானா எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. தொடர்ந்து உயரும் எண்ணிக்கை என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர். ஆனால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.
கொரானா என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய கிருமி. பொதுமக்கள் கொரானா பாதித்தவர்களை ஒதுக்கக் கூடாது. அவர்களை தனித்துப்பார்க்கும் எண்ணம் கொள்ளக் கூடாது.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டுமே 35000க்கும் மேற்பட்ட பரிசோதனை எடுக்கப்படுகிறது. மதுரையில் காய்ச்சல் கண்டறியும் குழு மூலம் அனைத்துப் பகுதிகளிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் கூட கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது. மதுரையில் கிராம மற்றும் பஞ்சாயத்து பகுதிகளிலும் தெரு தெருவாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
மதுரையில் 1625 பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த உள்ளோம். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை அரசு மருத்துவமனையே பெரியது. மதுரை அரசு மருத்துவ மனையில் படுக்கை வசதிகள் அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மதுரையில் முதல்கட்டமாக கொரானா பாதித்த 465 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் அடிப்படையாகவே தமிழகத்தில் படுக்கை வசதியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 3500 வென்டிலேட்டர்கள் உள்ளன. மதுரைக்கு கூடுதலாக 50 வென்டிலேட்டர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்கள் அதிகளவில் முகக்கவசத்தை கழட்டி வைத்துள்ளனர். சரியாக பயன்படுத்தவில்லை. முகக்கவசம் இல்லாமல் உள்ளனர்.
உடலில் நோய் குறித்த சந்தேகம் இருந்தால் அதை மறைக்க கூடாது. 98.7 விழுக்காடு மக்கள் குணமாகி விட்டனர். தமிழகத்தில் கொரானா இறப்பை குறைக்க கடுமையாக உழைத்து வருகிறோம். கொரானா தடுப்பு என்பது மிகப் பெரிய சவாலான பணி.
சுனாமி வெள்ளம் கனமழை போல் கொரானா இல்லை. கொரானாவுக்கு எதிரான ஆயுதம் மாஸ்க் அணிவது, கை கழுவுவது ஆகியவைதான். முதியவர்களை பட்டுப்பூச்சி போல பாதுகாக்க வேண்டும்.
தில்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களோடு தொடர்ந்து தொடர்பிலேயே உள்ளோம். தமிழகத்தில் தேவையான பரிசோதனைகளை செய்ய 95 இடங்கள் உள்ளன. கொரானா பரிசோதனை கிட்-களை 95 விழுக்காடு மாநில அரசே வாங்கியுள்ளது. மற்ற மாநிலங்கள் தனியார் பங்களிப்புடன் வாங்கியுள்ளனர்.
தோண்டி எடுத்து தொலைநோக்கு பார்வையோடு கொரானா பாதித்தவர்களை கண்டறிந்து வருகிறோம். ஒப்பந்த அடிப்படையில் தேவையான அளவு ஆட்களை, மருத்துவர்களை, செவிலியர்களை நியமிக்க அரசு மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவு இட்டுள்ளோம்.
கொரானா இறப்பை மறைக்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. கொரோனா உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்கொலை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
தமிழகத்தில் மட்டும் தான் கொரோனா தடுப்பு எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.. சர்க்கரை, மற்றும் இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அதிகமாக கொரோனாவால் உயிரிழக்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தொடர் பணி, சீரிய திட்டங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் முக கவசங்கள் , சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை அலட்சியாக எடுத்துக்கொள்ள கூடாது. பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையில் எடுக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் மீண்டு விடலாம். வரும் ஓராண்டிற்கு பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி ஆகிய பழக்க வழக்கங்களுக்கு தங்களை தயாராக்கிக் கொள்ளவேண்டும்.
மதுரை மாவட்டத்திற்கு ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ்ஆக்ஸ் மீட்டர் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களான சுகாதாரதுறை, தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் வணக்கம் செலுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைவு. தமிழகத்தில் தற்போது நிகழும் இறப்பை கூடுமானவரை குறைக்க வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் குறிப்பாக தென் மாவட்டங்களில் தேவைக்கேற்ப பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்.
கிராமப்புறம் குடிசைப் பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து கொரானா தடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வல்லுநர் கருத்துக்களின் அடிப்படையில் களப்பணி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
பிளாஸ்மா தெரபி நல்ல நிலை இருந்தால் அதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரானா நுண் கிருமியின் புதிய வகை. அச்சப்படவோ தேவையற்ற பீதியோ தேவையில்லை. ஓராண்டு வரை மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அதுவே நிரந்தரத்தீர்வு ஆகும்.
தமிழகத்தில் ஏற்கனவே நல்ல மருத்துவ கட்டமைப்பு உள்ளது. தற்போது கூடுதல் கட்டமைப்பு ஏற்படுத்த முதல்வர் உத்தரவு இட்டுள்ளார்.
கொரானா காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு தேவை ஊக்கம் என பேசினார்.
அவரது பேட்டியின் போது வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மேலூர் எம்.எல் ஏ. பெரிய புள்ளான், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ரவிச்சந்திரன், மதுரை