சென்னை:
அரியலூர் மாணவி அனிதா, தான் நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், நீட் தேர்வே கூடாது, அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி வந்தார். ஆனால், நீட் தேர்வின் படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், தனக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், உயிரிழந்த அனிதாவுக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப் பட்டன. ஆனால், அனிதாவின் மர்ம மரணத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக இப்போது பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வரை வாதாட அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, வழக்கு தோல்வியுற்றதும், வழக்குச் செலவைக் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவியின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் சில கேள்விகள்:
மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள்
எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும்.
ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை
நடந்ததாலும், நீட் தேர்வில் அனிதா மிகவும் குறைந்த மதிப்பெண்
எடுத்திருந்ததாலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர இயலவில்லை. அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் நிலை இது தான். நீட் தேர்வு குறித்த
சரியான புரிதல் கூட ஏற்பட்டிருக்காத அனிதா போன்ற கிராமப் பகுதி ஏழை மாணவர்களை, நகர்ப்புற பணக்கார மாணவர்களுடன் நீட் தேர்வு என்ற பெயரில் போட்டியிட வைத்தால் அவர்களுக்கு தகுதியிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்.
இருப்பினும் அனிதாவின் மரணத்தின் பின்னுள்ள சில கேள்விகள் இன்று பரவலாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றன….
வழக்கு தோல்வி அடைந்த பிறகு பரவாயில்லை, நான் விவசாயம் படிக்கிறேன் என்று
நேர்மையுடன் சொன்ன மாணவி எப்படி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு
துணிந்திருக்க முடியும்?
சாதாரணமாக ஒருவர் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த வித பயமும் இல்லாமல் இந்த சமூகத்தை எதிர்கொள்ள பழகி விட்ட தெம்பு கிடைத்து இருக்கும். எதையும் எதிர்கொள்ளும் மனநிலையுடன் தான் அனிதா இருந்திருப்பார். ஆனால் அதற்கு மாறாக தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் கிராம நிர்வாக அலுவலர் அங்கே
சென்று, அந்தச் சம்பவம் குறித்த அறிக்கையை காவல் துறையிடம் தெரிவிப்பார்.
அதன் பின்னரே ஊடகங்கள் வரத் தொடங்கும். ஆனால் அனிதா விடயத்தில் எப்படி
ஊடகங்கள் முன்னரே தகவல் தெரிந்து, அங்கே கூடிவிட்டார்கள்?
அனிதா பள்ளிக்கு செல்லக்கூட வெறும் காலில் செருப்பின்றி நடந்தே சென்று
படித்தவராம். தனது ஏழ்மை நிலையையும் கடந்து, கல்வி கற்கும் தாகத்தால் அதிக மதிப்பெண்களை வாங்கினார். அப்படி இருக்கும் பொழுது அவர் தில்லி சென்று வர விமான டிக்கெட்டுகள் வாங்கி கொடுத்தது யார்.?
மிக உயர்ந்த வசதி கொண்ட விடுதியில் தங்க, அந்த ஏழைச் சிறுமிக்கு பணம் கொடுத்த சக்தி எது..?
உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிட்டிங்குக்கு பல லட்சம் வாங்கும் வக்கீலுக்கு பணம்
கொடுத்த கல்வித் தந்தை யார்..?
அந்த வக்கீல் எவ்வளவு வாங்கினார்? யார் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில்
உண்டா..? என்பன போன்ற சந்தேகத்திற்கிடமான கேள்விகள் பல, மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், அனிதாவை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறிய வார்த்தைகள்தான் என்று குடும்பத்தார் கூறுகின்றனர்.
இவர்தான் பல முறை அவர் வீட்டுக்குச் சென்று, நம் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால், நம்மால் மற்றவர்களுக்கு வாழ ஏதேனும் செய்துவிட்டு மடிய வேண்டும் என பல முறை கூறினார் என்கிறார்கள்.
இவர் ஒரு என்ஜிஓ குழுவைச் சேர்ந்தவர். ஏன் இவர் அப்படிக் கூறினார்? இவர் பின்னால் இருப்பவர்கள் யார்.? என்று சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கேள்விகள் எழுந்துள்ளன.
வழக்கு தோல்வி அடைந்த நிலையில், “பரவாயில்லை நான் விவசாயம் படிக்கிறேன்” என நேர்மையுடன் சொன்ன அந்த மாணவியிடம், செலவழித்த பணத்தை திரும்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்குதல்களால் அந்தப் பெண் மன உளைச்சல் அடைந்தாராம். இதன் காரணமாக அனிதா தற்கொலை முடிவுக்குப் போயிருப்பாள் என்று உறவினர்கள் கூறியதாக தகவல்கள் பரவின.
இந்த விவகாரத்தில் சாதிக்க துடித்த ஒரு மாணவியின் ஏக்கத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடி விட்டனர் என்று எதிர்க்கட்சியினரையே பலரும் வசைபாடுகின்றனர்.



