சென்னை மாநகராட்சி அலட்சியம்..! வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் சென்னையில் 500
பேருக்கு டெங்கு
சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல்
சுகாதாரத்துறை திணறி வருகிறது. பருவமழை தொடங்கிய நாளில் இருந்து ெசன்னையில்
ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,
500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 200 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல்
பரவாமல் எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை
எடுத்தாலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். கடந்த ஆண்டு
டெங்கு காய்ச்சல் பரவிய போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு
போன்றவற்றை கொடுத்து வந்தனர்.
அதனுடன் சேர்த்து அலோபதி மருத்துவத்தில் உள்ள மருந்துகளையும் உட்கொண்டதால்
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. மேலும் சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால்
பொதுமக்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து பலநாள்
வைத்திருப்பதால் அதில் டெங்கு காய்ச்சல் உண்டு பண்ணும் ெகாசுக்கள்
உற்பத்தியாகிறது.
மேலும் மழைநீர் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் தேங்கி நிற்பதால் அதன் மூலமும்
கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த
முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி,
சூளைமேடு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே டயர்கள், தொட்டிகள்,
பெயின்ட் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் மழைநீர் சேராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.