மணப்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 13-வது வார்டுக்குள்பட்ட கோவில்பட்டிசாலை திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மனைவி வைரமணி ராஜவீதியில் தையலகம் வைத்து நடத்தி வருகிறார். இம்மாத இறுதியில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் அதற்கான 18 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்துள்ளார்.
நேற்று பிற்பகலில் பொன்னம்பலம் பணிக்கும், வைரமணி தையலகத்திற்கும் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் முகஅழகு செய்வதற்காக வீட்டை பூட்டி அருகில் ரகசியமாக ஒரு இடத்தில் சாவியை வைத்துவிட்டு அழகு நிலையம் சென்றுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய பெண் மீண்டும் சாவியை எடுத்து வீட்டை திறந்து இயல்பாக நிலையில் இருந்துள்ளார். இரவில் வீட்டில் இருந்த பீரோவை திறந்தபோது அதில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டும் அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனையடுத்து பொன்னம்பலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையிலான காவலர்கள் கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.