வாட்ஸ்-அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் 4 பேர் கைது

Published:

ஓசூர்: ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 18-ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒரு மாணவர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்போன் மூலம், வினாத்தாளை படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலம் மற்றொரு ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். அப்போது, பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையத்துக்குள் வந்து மாணவர்களிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, மைய கண்காணிப்பாளரான மகேந்திரனிடம் ஒருவர் சோதனை செய்தார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது தெரியவந்தது. அதை அடுத்து, ஆசிரியர் மகேந்திரனின் செல்போனை அதிகாரிகள் வாங்கிப் பார்த்தனர். அதில் ‘வாட்ஸ் அப்’ மூலம், அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத்தேர்வின் வினாத்தாள் பிறருக்கு அனுப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தனக்கு வந்த வினாத்தாளை ஆசிரியர் உதயகுமார் மேலும் 2 ஆசிரியர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்களை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார் மற்றும் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img