கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நெல்லை கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தன்னுடைய தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
கையில் பதாகை ஏந்தி திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வாசலில் போராட்டத்திற்காக அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறி நந்தினியையும், அவருடைய தந்தையையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவி நந்தினி பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவி நந்தினி டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


