தென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்!

Published:

purevicyclone
purevicyclone

தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னமானது தற்போது பாம்பனில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 290 கிமீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 480 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது இலங்கையில் கரையை கடந்து தெற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை :

இன்று இரவு முதல் தென்மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். நாளை தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். 20 செமீக்கு மேல் பெருமழை பெய்யும்.

விருதுநகர் மதுரை தேனி சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது . அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். கரூர் சேலம் நாமக்கல் வேலூர் திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

புயலானது வலுவிலந்து தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என்பதால் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இரவு பகல் என தொடர்ந்து காற்றுடன் மழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் இருப்பது நல்லது.

மாஞ்சோலை காக்காச்சி ஊத்து திருச்செந்தூர் காயல்பட்டினம் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் சாத்தான்குளம் விளாத்திகுளம் இராமேஷ்வரம் இராமநாதபுரம் ஸ்ரீவைகுண்டம் கன்னியாகுமரி கோதையாறு தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்யும். ஒட்டுமொத்த தென் தமிழகமும் நல்ல மழை பெறும்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக கனமழை பெய்யும். தேனி மதுரை சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திலும் மிக கனமழை வரை பெய்யும்.

தென்மேற்கு வங்க கடல் அரபிக்கடல் மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் .

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

20 ஆண்டுகளுக்கு பிறகு தென் தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை :

கடந்த 1992 ,2000 ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இலங்கை தென் தமிழகம் வழியாக புயல் கரையை கடக்கிறது.

1992 ம் ஆண்டு உருவான புயல் சின்னம் தூத்துக்குடி மாவட்டம் வழியாக கரையை கடந்தது. அப்போது தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. 1992 ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையை கடந்த புயலால் தென் தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை சந்தித்துள்ளது .

அப்போதைய தென் தமிழகத்தின் சேத மதிப்பு 69 மில்லியன் கோடியாக கணக்கிடப்பட்டது. நவம்பர் 13,1992 ல் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் பகுதியில் ஒரே நாளில் 321மிமீ மழை பதிவானது. பாபநாசம் 310 மிமீ மழையும் மணிமுத்தாறு 260 மிமீ மழையும் பதிவாகி வரலாறு சாதனை படைத்தது.

வரலாறு காணாத மழையால் தாமிரபரணியில் 2,04,273 கன அடி நீர் திறக்கப்பட்டது . இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாபநாசம் முண்டந்துறை பாலம் அடித்து செல்லப்பட்டது. சுமார் 500 பேர் வரை பலியாகினர். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது .அதே ஆண்டு வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மதுரை மாவட்டமும் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இதற்கு முன்பு கடந்த காலங்களில் பலமுறை தென் தமிழகம் அதிகனமழையை பெற்றுள்ளது. இன்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தென்மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். நாளை முதல் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யும். வட மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த தமிழகமும் மழை பெறும்… என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img