சென்னை :
ஆளுநரின் செயல்பாடு பற்றி விமர்சிப்பது சட்ட விரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படியே ஆளுநரின் ஆய்வு நடத்தப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆளுநர்தான். மாநில நிர்வாகத்தின் அனைத்துத் தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
அதுபோல மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது. ஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப் பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன.
நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது.
அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநரின் அலுவலகத்தை மரியாதைக் குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- பொதுமக்கள் நலன் கருதியும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் வகையில் ஊக்குவிக்கவும் ஆளுநர் செயலாற்றி வருகிறார்.
- அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்புவது சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிப்பது.
- தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது.
- அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநர் உள்ளார்
- ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது