
மதுரை மல்லிகையின் விலை ஒரு கிலோ ரூபாய் 3 ஆயிரம். பிற மலர்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகேயுள்ள மலர் சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் பெருங்குடி, வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வருகின்றன.
குறிப்பாக மதுரை மல்லிகை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50 டன் மலர்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்ததால் மல்லிகை வரத்து குறைவாக இருந்தது இதன் காரணமாக கிலோ ரூபாய் 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் பிற பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
இந் நிலையில் , கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகை இன்றைய விலை ரூபாய் 3 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.1200, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மழைப் பொழிவு குறைந்து வெயில் அடித்த தொடங்கியுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் மல்லிகையின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும். பூக்களின் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.