சென்னை: பசு இன படுகொலை தடுக்கப்பட வேண்டும், மாட்டு இறைச்சி ஏற்றுமதியை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மராட்டிய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சித் தடை சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது. உண்மையில் இதற்கு முன் உதாரணமாக தமிழகம் தான் இருந்திருக்க வேண்டும், கொல்லாமையும், கள்ளுண்ணாமையும் வலியுறுத்திய திருவள்ளுவருக்குச் சிலை வைத்த தமிழக அரசியல்வாதிகள் தெருவெங்கும் இறைச்சி கடை பரப்புவதைக் கண்டுகொள்ளவில்லை, வீதியெங்கும் மாட்டிறைச்சி பிரியாணி கடைகள் வியாதியை பரப்புவதை கண்டுகொள்ளவில்லை. ஊரெங்கும் அரசே மதுபானக் கடை நடத்தும் அவலம் நீடிக்கிறது. இவர்கள் தமிழையும் நேசிக்கவில்லை, தமிழ் கூறும் அறங்களையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை. நமது நாட்டு மக்கள் பசுவையும், காளைகளையும் தெய்வமாக வழிபடுபவர்கள். அதன் தெய்வீக ஆற்றலை மக்கள் உணர்ந்து போற்ற முன்னோர்கள் கோவில்களில் பசு மடங்களை அமைத்தார்கள். தானமாக கொடுக்கப்படும் பசுக்களும், காளைகளும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்துறைக்கு உள்ளது. இந்நிலையில் ஆலயங்களில் பராமரிக்கப்படும் பசுக்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் பிராணி நல வாரியம் உட்பட சிலரை குழுவாக அமைத்து, ஆலயங்களுக்குச் சென்று கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளது. இதனை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை பிராணி நலன் விரும்பிகள், கால் நடை மருத்துவர்கள் முதலானவர்கள் அடங்கிய ஒரு குழுவை நிரந்தரமாக நியமித்து தகுந்த முறையில் ஆலயங்களில் பசு இனங்களைப் பாதுகாக்க, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது நாடு இன்றும் விவசாய நாடு தான். இது நீடிக்க வேண்டுமானால், உணவு உற்பத்தி தரமானதாகவும், உற்பத்தி பெருகவும் பசு இனப் பாதுகாப்பு மிகமிக முக்கியம். பசுஞ்சாண உரம், பசுஞ்சாண பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தினால் உலக அரங்கில் நமது விவசாய பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். நமது நாட்டு மக்களும் நோயில் வீழ்ந்து இறக்கும் விகிதம் குறையும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய மாம்பழங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் இறக்குமதி செய்ய ஆதரவு தெரிவித்துள்ளன. இத்தகைய நிலையில் தமிழக விவசாயிகள் தரமான இயற்கை உரத்தைப் பயன்படுத்தி சந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக இந்து முன்னணி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். தோல் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியதன் விளைவு வேலூர் மாவட்டம், பல்லாவரம், குரோம்பேட்டை முதலான சென்னை புறநகர் பகுதிகள் முதலானவை பாழாய் போனது. இந்நிலை மாற்ற வேண்டும். எனவே, மத்திய அரசு பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதியையும் தடை செய்ய வேண்டும். இது மாண்புமிகு பாரத பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதி என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறோம். மாடு அழிந்தால், விவசாயம் அழியும். விவசாயம் அழிந்தால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும். உணவிற்கு வெளிநாட்டிடம் கையேந்தும் நிலை உருவாகும். இந்த அவலத்தைத் தடுக்கவும், சுற்றுச்சுழலை பாதுகாக்கவும் மத்திய அரசு பசு இனப் படுகொலையை தடை செய்ய முன் வரவேண்டும். இதற்கு முதல் படியாக சட்டவிரோதமாக, லாரிகளில் கால்நடைகள் ஏற்றுச்செல்வதை, மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதையும் தடுக்க கடும் நடவடிக்கை மூலம் அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
பசு வதை; மாட்டிறைச்சி ஏற்றுமதியை அரசுகள் தடை செய்ய வேண்டும்: ராம.கோபாலன்
Published:

