சர்வதேச குடும்ப தினம்
கட்டுரை: கமலா முரளி
குடும்ப நலனுக்காக , மற்ற குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்காக தம் விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துப் பாடுபடும் நல்லிதயங்கள் நிறைந்த நாடு நம் நாடு !
பிள்ளைகளுக்காக உழைக்கும் பெற்றோர், அவர்களைப் போற்றி வணங்கும் பிள்ளைகள், அக்கா தங்கைகளுக்காக எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் உதவி செய்யும் அண்ணன் தம்பிகள், புகுந்த வீட்டில் இருந்தாலும், பிறந்த வீடு நன்றாய் இருக்க விரதம் இருக்கும் பெண்கள், ரக்க்ஷாபந்தன் கொண்டாடித் தன் அன்பை வெளிப்படுத்தும் சகோதரிகள் என குடும்பப் பாசம் என்பது நம் இந்திய மண்ணின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று !
நம் வீடுகளில் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும், ஒவ்வொரு சொந்தத்துக்கும் ஒரு பிரத்யேகப் பணி இருக்கும். மாமன், அத்தை, மாப்பிள்ளை என ஒவ்வொருவரும் தங்கள் முறையை (role ) விட்டுக் கொடுக்காமல் செய்வார்கள். பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்ய வரவேண்டும் ! சிறு குழந்தைகளுக்குக் கூட பங்களிப்பு இருக்கும்.
போன தலைமுறையில் பெற்றோருடன், கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் தத்தம் மனைவிமாருடனும், சிறுபிள்ளைகளுடனும் கூட்டுக் குடும்பமாக, அருகில் உள்ள தெருக்களிலோ, கிராமங்களிலோ பிற உறவினர்கள் இருந்தார்கள். சிறு விழாக்களில் கூட நூறு இலை விழுமளவு கூட்டம் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில், கூட்டுக்குடும்ப அமைப்பு மாறி விட்டது. இருந்தாலும், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் அனைவரும் பங்கேற்கின்றனர்.
மெல்ல,மெல்ல சிறு குடும்ப முறைக்கு மாறி விட்டதால்… ஒரு குழந்தை அல்லது குழந்தையே இல்லை என்ற நிலையில் வரும் காலங்களில் சித்தப்பா, அத்தை உறவுகள் எதிர்கால சந்ததியினருக்குத் தெரியுமா என்பதே கேள்விக்குறி !
”குடும்ப நாள்” எனக் கொண்டாடும் வழக்கம் நம் நாட்டில் இல்லை! ஆனால், குடும்பத்தின் அருமையை பெருமையை உணர்ந்தவர்கள் நாம்!
உலகமே.. இந்த பூமியே… நம் குடும்பம் எனப் பொருள் படும் “வசுதைவ குடும்பகம் “ என்ற தத்துவம் நமது வேதங்களில் அடங்கியுள்ள மஹா உபநிடதம் 6.71 ல் இடம் பெற்றுள்ளது. இந்த சுலோகம் பாராளுமன்றத்தின் நுழைவாயிலிலும் வைக்கப் பட்டுள்ளது.
கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று செய்யுளிலும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
குடும்ப அமைப்பு தான் நம் நாட்டின் ஆணி வேர்.
குடும்ப நாள் எனக் கொண்டாடும் வழக்கம் தேவையற்றதாக இருந்தது. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் குடும்ப நாள் தான் ! குடும்பத்தோடு தான் ! குடும்பத்துக்காகத் தான் !
தொழில் மற்றும் வேலை வாய்ப்புக் காரணங்களால், சொந்தங்களைப் பிரிதல், தனிக்குடும்ப விருப்ப நிலை முதலியவை இன்று அன்றாடம் நம் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இல்லாமல் இருக்கும் படிச் செய்துவிட்டது !
பண்டிகை, முக்கிய நாட்களில் சேர்ந்து கொண்டாடுவது கூட பிள்ளைகளின் தேர்வுக்காலம், விடுமுறைப் பிரச்சினை மேலும், பயணம் செய்ய பணம் செலவிட முடியாத நிலை என நம் நாட்டிலும், குடும்பத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்து உணர வைக்க வேண்டிய நிலை !
இன்று சர்வதேச குடும்ப நாள் !
நம் குடும்ப உறவுகளின் ஷேம லாபங்களை தொலைபேசியிலாவது தெரிந்து கொள்வோமே !
சில சிந்தனையாளர்கள், வருடத்துக்கு ஒருமுறையாவது, குலதெய்வ வழிபாடு போன்ற நிகழ்வில் கட்டாயமாக அனைவரும் கலந்து கொள்வது , எல்லாக் குடும்ப உறவுகளின் விவரத்துடன்”குடும்பப் புத்தகம்” தயாரிப்பது , காணொளி, புகைப்படத் தொகுப்பு ஏற்படுத்துவது போன்றவை கூட நம் குடும்ப கட்டமைப்பை வலுப்படுத்தும் எனச் சொல்லுகின்றனர்.
இதை விட முக்கியமாக, நம் உறவுகளுடன் நல்லுறவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் .
“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை “ என்பதை உணர்ந்து,இன்சொற்களோடு இனிய உறவை மேம்படுத்த வேண்டும் !
இப்போது இருக்கக் கூடிய சிறிய குடும்பத்திலேயே சண்டைகள் , சச்சரவுகள் என்ற நிலையை பொறுமையைக் கடைபிடித்து மாற்ற வேண்டும்.
இன்றைய பெருந்தொற்றுக்காலத்தில், அண்டை வீட்டாருடன் கூட அளந்து… தள்ளி நின்று பேசும் நிலைக்கு வந்தாலும், நமக்கு அருகில் இருப்பவர்களும் நம் சொந்தங்களே …. “வசுதைவ குடும்பகம்” என்ற உயரிய வார்த்தைகளை நினைவில் வைத்து, ”யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் உணர்வுடன் வாழுவோம் !
குடும்ப அமைப்பைப் போற்றுவோம் ! தேச நலனைக் காப்போம்!
கà¯à®Ÿà¯à®®à¯à®ªà®®à¯ ஒர௠கதமà¯à®ªà®®à¯ பல வணà¯à®£à®®à¯ பலவணà¯à®£à®®à¯