காஞ்சிபுரம் அருகே புளியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவரும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் வசித்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த அனு(21).
இவரது கணவர் பாலமுருகன் திருநெல்வேலியை அடுத்த சிவகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் புளியம்பாக்கத்தில் தங்கியிருந்த அனுவை கணவர் பாலமுருகன் சம்பவ நாளன்று சந்திக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பாலமுருகன் தான் வைத்திருந்த கத்தியால் அனுவை குத்தி கொலை செய்தார். பின்னர் பாலமுருகனும் தான் வைத்திருந்த அதே கத்தியால் கழுத்திலும், வயிற்றிலும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பாலமுருகன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த அனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.