ஹிந்து தர்மத்தின் உயர்ந்த பக்திமார்கத்தின் ஆணிவேரை அறுத்தெறிய செய்யும் முயற்சி – அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமங்கள் கடைபிடிக்க வேண்டும் மக்களின் மனக் கொந்தளிப்புக்கு ஆளாகாதீர்கள் என்று, இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில்… நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் சட்டசபையில் கோவிலில் அர்ச்சகர் நியமனம் பற்றி பேசுகின்ற பொழுது ஈ.வே.ரா வின் நெஞ்சில் தைத்த முள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி அமைப்பு நடத்திய ஈவேராவுக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? ஈ.வே.ரா ஆசையை நிறைவேற்ற சட்டம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஈ.வே.ரா வின் ஆசை இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதும், தமிழ் நாட்டை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் ஆள வேண்டும் என்பது தான் என்பது தமிழ்நாடு அறிந்த உண்மை.
ஆக, இந்துக்களுக்கு இந்து மதத்தின் மீது வெறுப்புணர்வை வளர்த்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மதமாற்றத்திற்கு உதவி செய்வதற்காகவே திட்டமிட்ட சதிச் செயல்களை செய்கிறது என்று விவரம் அறிந்த இந்து பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர்.
ஈவேரா கொள்கைகளை கட்சியில் கூட அமுல்படுத்தாமல் அதாவது அனைத்து சாதியினரையும், குறிப்பாக பட்டியலினத்தவர்களை திமுகவின் தலைவராக, திராவிடர் கழகத்தின் தலைவராக கொண்டு வராமல் கோவில்களில் ஈவேரா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. மக்களை ஏமாற்றுவது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், இந்து மதத்தை வெறுத்து ஒதுக்குபவர் , முஸ்லீம் கிறிஸ்தவ மதத்தை பாராட்டுபவர். தி.மு.க. அரசு மூச்சுக்கு மூச்சு மதசார்பற்ற அரசு என்று கூறுகிறது. மதசார்பற்ற தி மு க அரசால் சர்ச், மசூதிகளில் முல்லா, மௌல்லிகளையும் பாதிரியார்களையும் நியமிக்க முடியுமா?
பாதிரியார், முல்லா மௌல்விகளுக்கு பயிற்சி கொடுக்க ஸ்டாலினால் முடியுமா?
மதசார்பற்ற அரசு இந்துக் கோயில்கள் விஷயத்தில் மட்டும் தலையிடுவது ஏன்?
ஈவேராவின் முள்ளை நீக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தால் கட்சி சார்பில் தனியாக கோவில்களைக் கட்டி, வேத பாடசாலை அமைத்து, ஆகமங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் கட்சிக்காரர்களுக்கு பூசாரி வேலை கொடுக்கலாம். அதை விடுத்து பாரம்பரிய நடைமுறைகளை மாற்ற முயற்சிப்பது தவறு, இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு என்பது ஆதினமோ அல்லது மடமோ அல்ல, மதரீதியான அல்லது ஆகம ரீதியான பிரச்சினைகள் எழும்போது அரசு எந்திரங்களுக்கு இதில் தீர்வு காணும் உரிமை இல்லை, இந்த நிலையில் அர்ச்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்று அரசு எவ்வாறு முடிவு செய்ய முடியும்.
குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியை சார்ந்தவர்தான் அறங்காவலர் என்பது ஊர் அறிந்த ரகசியம் இதேநிலைதான் எதிர்காலத்தில் அர்ச்சகர்களை நியமிக்கும் முறைகளிலும் ஏற்படும். குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் அர்ச்சகராக இருப்பார். கோவில்கள் கட்சி கொள்கைகளை புகுத்தும் அலுவலகமாக மாறும். அர்ச்சகர் வேலையை அரசு வேலையாக்கி இந்து கோயில்களை அழிக்கும் வேலையை ஸ்டாலின் அரசு செய்யக் கூடாது.
அர்ச்சனை என்பது பணியல்ல அது பக்தி, அரசின் தற்போதைய நிலைபாட்டால் இது வேலை வாய்ப்பாக மாறி, உயிருள்ள பக்திமார்கத்தின் ஆணிவேரை அறுத்தெறிய செய்யும் முயற்சியாகவே அமைந்து விடும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இருதயமாக வருணிக்கப் படும் முகவுரையில் மதசார்பற்ற அரசு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டு விஷயங்களில் அரசு தலையிடுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது
மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 26 எல்லா சமயத்தவருக்கும், பிரிவினருக்கும், சமய மற்றும் அறநிலைய அமைப்பு ஏற்படுத்திப் பராமரிக்க, சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட நிலையில் இந்து வழிபாட்டு முறைகளில் தமிழக அரசு தலையிடுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் சுமார் 50% கோவில்களில் பிராமணரல்லாதவர்கள் தான் பூஜை செய்து வருகிறார்கள். இது தொன்று தொட்டு இந்து சமுதாயத்தில் நடைபெற்று வரக்கூடிய மரபு. ஏதோ இப்போதுதான் பிற ஜாதியினர் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை தமிழக அரசு ஏற்படுத்த முயல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
உடனடியாக அரசு இந்துக்களின் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கின்றது