ஒருவரை காதலித்து கர்ப்பிணியான இளம்பெண் மேலும் 3 பேரை திருமணம் செய்துள்ளார். இதில் ராணுவ வீரரிடம் லட்சக்கணக்கில் பணம், நகைகளை ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா (25). அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர்.
அப்போது சீனிவாஸ், திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் ரேணுகா கர்ப்பமானராம். ஆனால் சீனிவாஸ், ரேணுகாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதையடுத்து பெரியவர்களால் பார்க்கப்பட்ட ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் சில நாட்கள் ரேணுகா மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து ஜெகதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளார்.
பின்னர் அவரை ரேணுகா திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான 3மாதங்களில் ரேணுகா, சீனிவாசை காதலித்து கர்ப்பமானது ஜெகதீசுக்கு தெரிய வந்தது. ஜெகதீஸ், ரேணுகாவை பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையில் ரேணுகாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வளர்க்க முடியாமல் திணறிய ரேணுகா தனது கர்ப்பத்திற்கு காரணமான சீனிவாசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதற்கு சீனிவாஸ் குழந்தையை வளர்க்க பண தருவதாக கூறினார். மேலும் ரேணுகாவிடமிருந்து நிரந்தரமாக விடுபட சீனிவாஸ், ஒரு யோசனையை அவரிடம் தெரிவித்தார்.
அதாவது சீனிவாஸின் உறவினரான பிரசாத் ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவரது புகைப்படம் மற்றும் அவரது செல்போன் எண்ணை ரேணுகாவிடம் கொடுத்து பிரசாத்தை காதலிக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து ரேணுகாவும் தனது காதலன் சீனிவாஸ் கூறியபடி ராணுவ வீரரான பிரசாத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அவரிடம் அடிக்கடி ஆசை ஆசையாக பேசி வந்துள்ளார்.
இதையடுத்து தனது காதல் வலையில் விழுந்த பிரசாத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பிரசாத், தான் ராணுவத்தில் பணி புரியும் லக்னோவிற்கு ரேணுகாவை அழைத்து சென்றார். அங்கு ரேணுகாவிற்கு பிரசாத் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
சில மாதங்களில் பிரசாத்திடம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் தனக்கு வேலை கிடைத்து இருப்பதாக கூறி வந்துள்ளார். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பிரசாத், விசாகப்பட்டினத்திற்கு வர முடியவில்லை. போனில் மட்டும் தனது மனைவி ரேணுகாவிடம் பேசி வந்தார்.
அப்போது ரேணுகா தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். இதேபோன்று தாயாருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.45 லட்சம் செலவாகும் என டாக்டர் கூறியதாக பிரசாத்திடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி பணத்தை பெற்று வந்த ரேணுகா, ஒருநாள் தனது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பிரசாத், தான் ராணுவத்தில் இருப்பதால் என்னால் வரமுடியாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாய் என்ற இளைஞருடன் ரேணுகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 3வதாக திருமணம் செய்துள்ளார்.
கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் விசாகப்பட்டினம் வந்த பிரசாத்திற்கு ரேணுகா பற்றிய தகவல்கள் தெரிய வந்தது.
இதுகுறித்து காஜுவாக்கா போலீசில் பிரசாத் கொடுத்த புகாரில், என்னை திருமணம் செய்துகொண்ட ரேணுகா பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.