கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது கொட்லேட்டி. இந்த கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில் மல்லேஸ்வரன் மலை அடிவாரம் உள்ளது.
இந்த பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி மாலை சிலர் விறகு பொறுக்கச் சென்றனர். அப்போது, மலை அடிவாரத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தான்.
இது குறித்து பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலில் பல இடங்களில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்தன.
மேலும், தீயால் சுட்ட காயத்துடன் தலையில் மொட்டை போட்டவாறு இருந்தான். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் சிறுவர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலோ, அருகில் உள்ள மாவட்டங்களிலோ சிறுவன் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என பர்கூர் போலீசார் விசாரித்து வந்தனர். அதில் எந்த சிறுவர்களும் மாயமானதாக வழக்கு பதிவாகவில்லை என தெரிய வந்தது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் விசாரித்தனர்.
மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களிலும் சிறுவர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், பர்கூரில் கொலையான சிறுவனின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு பி.டி.எம். லேஅவுட் பகுதியில் குடியிருந்து வரும் தனலட்சுமி, தனது மகள் ஷோபாவுடன் பெங்களூரு மைக்கோ லே அவுட் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், தனது மற்றொரு மகள் நதியாவின் மகன் ராகுல் என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக பதிவான வழக்குகள், புகைப்படங்களை பார்த்ததில், பர்கூரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் புகைப்படத்தை காண்பித்தபோது அது பெங்களூருவை சேர்ந்த ராகுல் என உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில் குமார், இவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். கைதான சுனில் குமாரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சுனில் குமார் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர் மீது பெங்களூரு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நதியாவிற்கும், ரவி என்பவருக்கும் திருமணம் ஆகி ராகுல் பிறந்தான்.
அவனுக்கு 3 மாதம் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக நதியாவை விட்டு ரவி பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு சுனில் குமாருக்கும் நதியாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ராகுல் குழந்தையாக இருக்கும் வரையில் பிரச்னை இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ராகுல் வளர, வளர அவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளான்.
இதனால் சுனில் குமாரும், நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடித்தும், சூடு வைத்தும் சித்திரவதை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, சுனில் குமாருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சிந்து என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சுனில் குமார் நதியாவுடனும், சிந்துவுடனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுனில் குமாருக்கும் நதியாவிற்கும் இடையே இருந்த உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் ராகுல் இடையூறாக இருப்பதாக கருதியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி நதியா காய்கறி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுவன் ராகுல் வீட்டில் இருந்துள்ளான்.
அந்த நேரம் சுனில் குமார் சிறுவன் ராகுலை அடித்ததில் சிறுவன் இறந்து விட்டான். இதையடுத்து 2 இருக்கைகள் கொண்ட சிறிய ரக காரில் சிறுவன் ராகுலின் உடலை பின்னால் வைத்து சுனில் குமாரும், அவனது மற்றொரு கள்ளக்காதலி சிந்துவும் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு உடலை வீசிவிட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் கிருஷ்ணகிரி வழியாக குப்பம் சென்று உடலை வீச திட்டமிட்டனர். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியான குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே போலீஸ் இருந்ததால் அந்த முடிவை கைவிட்டு, பசவண்ணர் கோவில் வழியாக கொட்லெட்டி சென்று மலை அடிவாரத்தில் உடலை வீசி விட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டனர். இந்த விவரத்தை பின்னர் நதியாவிடம் கூறியுள்ளனர்.
மேலும், சிறுவன் காணாமல் போனது முதல் அவனது பாட்டி தனலட்சுமி, பெரியம்மா ஷோபா ஆகியோர் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர்.
அதற்கு, சிறுவன் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்கிறான் என்று கூறி வந்துள்ளனர். மாதக்கணக்கில் அவன் திரும்பி வராததாலும், பேசாததாலும் சந்தேகத்தில் அவனது பாட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மாட்டிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை பெங்களூரு சிறையில் அடைத்தனர்.