பெற்றோர்களே கவனம்: ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய 2 வயது சிறுவன்!

Published:

xray
xray

திருவண்ணாமலையில் 2 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நாணயத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றி அகற்றினர்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் மகன் மிதுன் (2). இந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். இதனால், உணவு உட்கொள்ள முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் தவித்துள்ளான்.

சிறுவனை பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் சிறுவனது தொண்டையில் ஒரு ரூபாய் நாணயம் சிக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காது மூக்கு தொண்டை துறையின் தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். பின்னர், அறுவை சிகச்சை பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு மயக்கவியல் மருத்துவர்கள் ஆனந்தராஜ், யுவராஜ் ஆகியோர் மயக்க மருந்து செலுத்தினர்.

அதன்பிறகு, ‘LARYNGOSCOPY’ முறையில் அறுவை சிகிச்சையின்றி, சிறுவனின் தொண்டை குழியில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக சிறப்பு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

பிறகு, மருத்துவர்களின் கண்காணிப்பில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, இரவு முதல் வழக்கமான உணவு வழங்கப்பட்டது. சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு, பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பேசிய மருத்துவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களது கவனக்குறைவால் சிறுவர்கள் ஆபத்தான நிலைக்கு செல்கிறார்கள். நாணயம் உள்ளிட்ட சிறிய பொருட்களை குழந்தைகள் கைப்படும் வகையில் வைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img