குரங்கு குட்டியை அதன் தாய் கைவிட்ட நிலையில், பழங்குடியின மூதாட்டி பராமரித்து வருகிறார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தமிழக – கேரள எல்லையில், கிளன்ராக் வனப்பகுதி உள்ளது.
இங்கு சோலைமந்திகள் எனும் கருங்குரங்குகள் உள்ளன.ஒரு மாதத்துக்கு முன், மரத்தில் இருந்து தாவும்போது, ஒரு சோலைமந்தி குட்டி, தவறி கீழே விழுந்துள்ளது.
மூன்று நாட்களாக சப்தமிட்டு கொண்டிருந்த இந்த குட்டியை, அதன் தாயோ, கூட்டமோ சேர்த்துக் கொள்ளவில்லை.
பழங்குடியினத்தை சேர்ந்த மூதாட்டி கல்யாணி, என்பவர், குட்டியை எடுத்து வந்து வீட்டில் வைத்து, பராமரித்து வருகிறார். தினமும் பழங்கள், சாதம், ரொட்டி வழங்குகிறார்.
கல்யாணி கூறுகையில், ”தற்போது என் பேரக்குழந்தை போல பாதுகாத்து வருகிறேன். என் மீது பாசமாக இருந்து, துள்ளி விளையாடுகிறது. அதுவாக வனத்துக்கு செல்லும் வரை பராமரிப்பேன்,” என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் நீலகிரி, தேனி, பொள்ளாச்சி, வால்பாறை, கேரளாவில் சைலன்ட்வேலி, கர்நாடகாவில் சிர்சி, மடிக்கேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே, சோலைமந்திகள் உள்ளன.’ஓராண்டு வரை தாயின் அரவணைப்பில் இருக்கும்.
சிறு குட்டிகள் தவறி கீழே விழுந்துவிட்டால், மீண்டும் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்வதில்லை’ என்றனர்.