பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டதின் கீழ் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
வங்கி வசதியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் 2014-ம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.
அத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 44.23 கோடி வங்கி கணக்குகள் உள்ளன.
டிசம்பர் 2021 வரையிலான கணக்குப்படி, அவற்றில் உள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 44.23 கோடி கணக்குகளில் 34.9 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும், 8.05 கோடி கணக்குகள் கிராம வங்கிகளிலும், 1.28 கோடி கணக்குகள் தனியார் வங்கிகளிலும் உள்ளன.
இவற்றில் 31.28 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்திறக்கப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகளில் 24.61 கோடி கணக்குகள் பெண்கள் பெயரில் உள்ளன.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 17.90 கோடி கணக்குகள் திறக்கப்பட்டன.