நாசா அனுப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது விரைவில் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணரும் என நாசா தெரிவித்துள்ளது.
நாசா உடன் ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கியது.
பிரான்சின் கயானா பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி கடந்த மாதம் 25ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசா இந்த தொலைநோக்கியை 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விண்ணில் செலுத்தியிருக்கிறது. மேலும் இதன் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய தொலைநோக்கி இது என விஞ்ஞானிகள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களைத் தெளிவாக ஆய்வு செய்யத் திட்டமிட்டு நாசா ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது.
மேலும் பிரபஞ்சத்தில் கருந்துளை (Black Hole) போன்ற பல அறியப்படாத ஆச்சரியங்களை இந்த தொலைநோக்கியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
தற்போது, 1 மாதம் கழித்து இதன் அப்டேட்டை நாசா வெளியிட்டுள்ளது. அதில், 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒரு மில்லியன் மைல் தொலைவில் காஸ்மிக் பார்க்கிங் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இது பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் வகையில் விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை விரைவில் அனுப்பும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.