
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சிறுத்தை குட்டியை தன்னார்வலர்கள் குழு பத்திரமாக மீட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் சிறுத்தை குட்டி ஒன்றின் தலை பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் சிக்கிகொண்டது. அதிலிருந்து தலையை வெளியே எடுக்க முடியாமல் 48 மணி நேரம் சிறுத்தை பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளது.
சிறுத்தையின் நிலையை பார்த்து நொந்துபோன நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர, அது வைரலாகியுள்ளது.
தண்ணீர் கேனுக்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்டதால், செய்வதறியாது தவித்த சிறுத்தை வனப்பகுதியில் அங்கும், இங்குமாக சுற்றித் திரியும் வீடியோவை பார்த்து மக்கள் வேதனையடைந்தனர்.
அந்த வீடியோ மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வனத்துறையினர், தன்னார்வலர்கள், கிராம மக்கள் ஆகியோர் அடங்கிய குழு, சிறுத்தையை பிளாஸ்டிக் கேனுக்குள் இருந்து விடுவிக்கும் பணியில் இறங்கினர்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான ரெஸ்கிங்க் அசோசியேஷன் ஃபார் வைல்டு லைஃப் வெல்ஃபேர் (RAWW) ட்விட்டரில், “பிளாஸ்டிக் கொள்கலனில் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று, தானேவில் உள்ள மஹா வனத்தில் உள்ள பத்லாபூரில் காணப்பட்டதாகவும், அதனை மீட்புக் குழுக்கள் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும்” பகிர்ந்திருந்தனர்.
அதன் பின்னர் மீட்புகுழுவினர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். கிராம மக்கள், வனத்துறையினர் உதவியுடன் நடத்தப்பட்ட தேடலின் முடிவாக, கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக சரியாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ, குடிக்கவோ முடியாமல் மிகவும் சோர்ந்து போனா நிலையில் சிறுத்தை குட்டியை கண்டறிந்தனர்.
மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையின் தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் கேன் பத்திரமாக நீக்கப்பட்டது.
பின்னர் ரெஸ்கிங்க் அசோசியேஷன் ஃபார் வைல்டு லைஃப் வெல்ஃபேர் பதிவிட்ட ட்வீட்டில் சிறுத்தை பத்திரமாக மீட்பட்டதையும், அது தலையில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் கேன் நீக்கப்பட்டதையும் தெரிவித்திருந்தனர்.
மேலும் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை சிறுத்தை குட்டி கண்காணிப்பில் வைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து RAWW மீட்புக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. “நல்ல வேலை!! மிகவும் பாராட்டத்தக்கது”, “மிக அருமையான செயல்.. கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக”, “ஹீரோஸ்,” என மீட்பு குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
மற்றொருபுறம் சிறுத்தைக்கு தீமை இழைத்தவர்களை வசைபாடியும் உணர்ச்சிப்பூர்வமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
Irresponsible behaviour of tourist and people venturing into forest to party is posing a grave threat to the wild animals. A Leopard with its head stuck inside a plastic jar was spotted near Badlapur in Thane district. @MahaForest has begun the search operation. @AUThackeray pic.twitter.com/2O0CIYcSYT
— Ranjeet Jadhav (@ranjeetnature) February 15, 2022