வேலுார் மாவட்டத்தில் வேலுார், கணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதி ஏ.டி.எம்., இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன.வங்கி அதிகாரிகள் ஆய்வில், இயந்திரத்தில் பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவப்பட்டிருந்ததும், ஒரே ஆசாமி இதை செய்ததும் தெரிந்தது. புகாரின்படி வேலுார் சைபர் கிரைம் போலீசார், ஏ.டி.எம்., மையங்களை கண்காணித்தனர். காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் அருகில் ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நுழைந்த ஒருவரை, காட்பாடி போலீசார் பிடித்தனர்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்
அவர், பெங்களூரு, ஒயிட் கார்டனைச் சேர்ந்த திம்மராயப்பா, 37; ஏ.டி.எம்., திருடன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, 44 ஏ.டி.எம்., கார்டுகளை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது: திம்மராயப்பா, இரண்டு இயந்திரங்கள் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நுழைவார். ஒன்றில், பணம் எடுக்க கார்டை நுழைக்கும் இடத்தில் பசை தடவி விட்டு, மற்றொரு இயந்திரத்தின் அருகில் நிற்பார். அப்போது வரும் வாடிக்கையாளர் பதிவு செய்யும், ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்து கொள்வார்.
வாடிக்கையாளர் பணத்தை எடுத்தவுடன், கார்டை எடுக்க முயல்வார். பசை ஒட்டியுள்ளதால் வெளியே எடுக்க முடியாது. இயந்திரம் பழுதடைந்து விடும். வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் தெரிவித்துவிட்டு சென்று விடுவார்.அதன்பின், திம்மராயப்பா கம்பி மூலமாக கார்டை எடுத்து, வேறு மையத்துக்கு சென்று, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார். இப்படி ஆறு மாதங்களில், 44 கார்டுகளை பயன்படுத்தி, 30 ஏ.டி.எம்., மையங்களில், 10 லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.





