வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது.
இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்தது.
இருப்பினும் மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு 1.1.2014 முதல் 31.12.2019 வரை பதிவை புதுப்பிக்க வேண்டிய காலம் இருக்குமாயின் அந்த பதிவுதாரர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் 1.03.2022-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி உங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு பதிலாக பதிவுதாரர்கள் பூம்புகார் சாலை, பாலாஜி நகர், 2-வது குறுக்கு தெரு, மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 1.03.2022-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.