பிரசித்தி பெற்றபெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி கோயிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.
செவ்வாய் கிழமை அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், காலை 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.
மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக் கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப் பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவுப் பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டு நின்றிருந்தனர். எந்தவித சத்தமும் கேட்காமல் அமைதியாக இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒடுக்கு பவனி கோவிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ் வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப் பட்டது.இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. தீபாராதனை நடந்த போது கோவில் கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டது.
விழா நிறைவு நாளான நேற்று அதிகாலை அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, சிறப்பு பூஜை, குத்தியோட்டம் ஆகியவை நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து நேற்று வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று பகவதியம்மனை வழிபட்டனர். கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.






