கன்னி யாகுமரியில் தொங்குபாலம் அமைப்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது,
குமரி மாவட்டத்தில் ஆயிரத்து 240 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகளை விரிவுபடுத்தும் பணி சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்தது. சேதங்களை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது பல்வேறு இடங்களில் சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மோதிரமலை குற்றியார் இடையே மேல்மட்ட பாலம் அமைப்பதற்கும் காளிகேசம்- கீரிப்பாரை இடையே 2 இடங்களில் மேல்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கூடங்குளம் செல்லும் சாலையில் குறுகிய பாலத்தை மாற்றுவதற்கு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணபதியான்கடவு பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி நிதின் கட்காரி தற்போது தமிழகத்தில் 15 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார். சாலைகளை மேம்படுத்துவதற்கு குமரி மாவட்டத்தில் ரூ. 5.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வண்ண விளக்கு அமைத்தல், வேகதடை அமைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மத்திய அரசு சாலை சீரமைப்புக்கு என ரூ. 100 கோடி நிதி வழங்கி வருகிறது. இந்த நிதி நெடுஞ்சாலை துறை மட்டுமின்றி காவல் துறை, சுகாதாரத்துறை, மோட்டார் வாகனத் துறை உட்பட 5 துறைகள் மூலம் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசு சாலை மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது.
பார்வதிபுரம் காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலை ரூ.49 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் 500 கிலோ மீட்டர் தூரம் மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
நான் மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து மனு அளித்துள்ளேன். குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராமேசுவரத்தில் புதிய திட்டங்கள் மூலமாக கடல் அரிப்பில் ரோடுகள் சேதம் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் அதை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளும் கூறியுள்ளேன்.
திட்ட மதிப்பீடு தயாரித்து கடல் அரிப்பால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். தமிழகத்தில் 47 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளது. சுங்கச்சாவடிகளில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். நகராட்சி பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் தற்போது 5 சுங்கச்சாவடிகள் உள்ளது.
அதை அகற்ற பரிந்துரை செய்துள்ளோம். இதேபோல் மத்திய மந்திரி நிதின் கட்காரியை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் 60 கிலோமீட்டர் உட்பட்ட பகுதிகளில் சுங்கச் சாவடிகளில் உள்ளதா என்பது குறித்து கணக்கெ டுத்து வருகிறோம். அந்த சுங்கச் சாவடிகளை அகற்றுவது தொடர்பாக மத்திய மந்திரியை சந்தித்து மனு அளிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.





