திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில்,18நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவில் இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார்.
இக்கோயில் பிரசித்தி பெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. கோவில் கொடிமரத்தில் கருடச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. 22-ம் தேதி புன்னைவாகனம், 23-ம் தேதி வெள்ளி ஹம்சவாகனம், 24-ம் தேதி தங்ககோவர்த்தனகிரி, 25-ம் தேதி பஞ்சமுக அனுமன் வாகனம், 26-ம் தேதி அண்டபேரண்டபட்சி வாகனம், 27-ம் தேதி புஷ்ப பல்லக்கில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். 28-ம் தேதி ரிஷியமுக பர்வத வாகனத்தில் பட்டாபிராமர் திருக்கோலத்திலும், 29-ம் தேதி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்திலும் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி உற்சவம் ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது. 6-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா, ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.






