அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிரந்தர ஆணையம் அமைக்கப்படும் வரை, முல்லைப்பெரியாறு அணை தொடர்பான சட்டப்பூர்வமான நடைமுறைகளை, அணை கண்காணிப்பு குழுவே மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், ஏ.எஸ். ஓகா, சி.வி. ரவிகுமார் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமர்வு கூறியுள்ளதாவது,
அணை பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அணைகள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்பட உள்ளது.இந்த ஆணையம் அமைக்க, ஒரு ஆண்டு காலம் அவகாசம் வேண்டும் என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறிஉள்ளார்.
அதை ஏற்கிறோம்.அதுவரை, இந்த அணை தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை, ஏற்கனவே செயல்பட்டு வரும் கண்காணிப்பு குழுவே கவனிக்கும். அதில், இரண்டு மாநிலங்களின் பிரதிநிதிகளும் இருப்பதால், தற்காலிகமாக இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணை, ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.





