ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி காண்டீபன் பூங்கொடி. இவர்கள் இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுடைய மகள் 14 வயது ஷாலினி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை இயல்பாகவே இருந்து வந்தார்.
ஆனால் தற்போது கடந்த ஒரு வருடமாக வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடமாக வலப்புற கண் வீக்கமடைந்து அதிலிருந்து தினமும் 15 புழுக்கள் வெளிவருகின்றன.
அருகில் உள்ள பல்வேறு கண்மருத்துவர்களிடம் காண்பித்தும் பலவகையான மருந்துகள் எடுத்துக் கொண்டும் இதுவரை எந்த பயனும் இல்லை
அவரது கண் இயல்பாக இருப்பதாகவே பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஷாலினி கண்களில் எறும்பு போன்ற புழுக்கள் தொடர்ச்சியாக வருவதால் ஷாலினியால் படிக்க முடியவில்லை.
இந்த அரிய வகை பாதிப்பினை சரி செய்ய வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அவர் அளித்திருக்கும் மனுவில் ‘9-ம் வகுப்பு படித்து வரும் என் மகளுக்கு கடந்த ஓராண்டாக வலது கண்ணில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட எறும்புகள் வெளியேறி வருகிறது. இது தொடர்பாக கண் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டோம்.
ஆனால், எந்தவித பயனும் இல்லை. பள்ளிக்கூடம் சென்று வரும் எனது மகள் இதனால் மிகுந்த அவதிப்படுகிறாள். இந்த பிரச்னைக்கு உயர் சிகிச்சை அளிக்க, மாவட்ட ஆட்சியர் உதவி செய்திட வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார்.
இந்த மனுவினை பெற்ற கலெக்டர் உடனடியாக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்களிடம் மாணவி ஷாலினியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தற்போது மாணவி ஷாலினிக்கு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவியின் இந்த விநோத பாதிப்பு குறித்து அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதை போல கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடாவை மாவட்டத்தில் ஒரு சிறுமியின் கண்ணில் இருந்து எறும்புகள் வெளியேறியது அதிர்ச்சியை உண்டாக்கியது.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி உறங்கிக்கொண்டிருந்தபோது காது வழியாக எறும்புகள் உடலுக்குள் சென்றிருக்கும்.
அதனால், அவை இப்போது கண் இமை வழியே வெளியேறுகின்றன என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.