தென்காசி இராஜபாளையம் வழியாக திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு கோடைகால ரயில் இயக்கப்படும் நிலையில் தற்போது திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே தென்காசி இராஜபாளையம் வழியாக
வாராந்திர கோடைக்கால சிறப்பு இரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க தென்காசி, இராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஏப்ரல் 21 முதல் ஜூன் 30 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,
7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,
3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்,
1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.
பழநி, கோவை மாநகர், உதகமண்டலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அருமையான நேர அட்டவணையில் இந்த இரயில் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து இந்த சிறப்பு இரயில் சேவை நீட்டிக்கப்படும் (அ) நிரந்தரம் செய்யப்படலாம் .





