ஜார்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகுட் மலையில் ரோப் கார்கள் மோதிய விபத்தில்
சிக்கி 40 மணி நேரம் தவித்த 15 சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகுட் மலையில் ரோப் கார்கள் மோதிய விபத்தில
இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் திரிகுட் மலையில், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மீட்பு பணி நடந்தது.
இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். ரோப் கார்கள் மோதலை தொடர்ந்து அதில் இருந்து குதிக்க முயன்ற ஒரு தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் மேற்குவங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் ரோப் கார்களில் சிக்கி 40 மணி நேரம் தவித்த 15 சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களால் மீட்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானப்படை, இந்திய ராணுவம், எண்டிஆர்எப் , ஐடிபிபி மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் குழுக்களால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சிக்கிய மீதமுள்ளவர்களை விரைவாக மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







