கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத துவக்கத்தில் நடைபெறும் விஷூ கனி உற்சவம் நாளை ஏப் 15இல் அதிகாலை நடைதிறந்ததும் நடைபெறும்
குருவாயூர் கோயிலில் சித்திரை விஷு தினத்தில் கோயிலின் குறுகிய வாசற்படிகளின் வழியாக சூரியக்கதிர்கள் குருவாயூரப்பன் மீது படிவது சிறப்பான நிகழ்வாகும்.
சித்திரையில் மேஷ ராசிக்கு செல்லும் சூரியன் உச்சம் பெற்று பலம் கூடுகிறது.எனவே, இந்த மாதங்களில்”சூரியநாராயணன்’ என்று போற்றும் சூரியன் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.
சன்னிதிக்கு எதிரே உள்ள முக மண்டபத்தில், தங்கத்தினாலான சிம்மாசனத்தில் சர்வ அலங்காரத்தில் குருவாயூரப்பன் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படுவார். அவருக்கு முன்பாக வெள்ளரிக்காய், கொன்றைப் பூக்கள், மாம்பழம், பலாப்பழம், முகம் பார்க்கும் கண்ணாடி, வஸ்திரம், தேங்காய் மற்றும் பல பொருட்கள் வெள்ளியிலான உருளியில் முதல் நாள் இரவே வைக்கப்படும்.
விஷூ என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் “சமம்” என்று பொருள். வருடத்தின் ஒரு சமதின நாளைக் குறிக்கிறது. இன்று இரவு கோயிலில் அத்தாழபூஜை சீவேலி முடிந்ததும் மூலவர் சன்னிதியில் காய்கனி மலர் பணம் வைத்து நாளை அதிகாலை 3மணிக்கு நடைதிறந்ததும் விஷூகனி தரிசனம் துவங்கி நடைபெறும்.இதை காண இன்றே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூரில் முகாமிட்டுள்ளனர்.