உளுந்தூர்பேட்டை
அருகேயுள்ள கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இக் கோவிலில் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான திருநங்கைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றனர்.
தேர் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று தெய்வநாயக செட்டியார் பந்தலடியை அடைந்தது. நேற்று தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள் இந்து முறை சாசனபடி கணவர் இறந்துவிட்டால் ஒரு பெண்ணுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதன்படி செய்து தங்களது நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து, வளையல்களை உடைத்து கும்மியடித்து அழுதனர்.
பின்னர் அருகில் உள்ள கிணற்றில் நீராடிவிட்டு வெள்ளை நிற புடவை உடுத்தி திருநங்கைகள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இறந்துபோன கூத்தாண்டவர் சாமியை காளிகோவிலுக்கு தூக்கிக்சென்று படையல்போட்டு, கிடாவெட்டி வருகிற 22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.





