சென்னை ஐஐடியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
சென்னையில் ஐஐடியில் நேற்று வரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் இதுவரை 1,420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .
கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று 666பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 18 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 389 பேருக்கு பரிசோதனை செய்ததில் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.