
நாடு, 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில், நாம் அன்னிய பொருட்களுக்கு அடிமையாக இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்,” என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
‘இங்குள்ள புனே நகரில் ஜெயின் சர்வதேச வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது:
நாடு, ‘தற்சார்பு இந்தியா’ என்ற முழக்கத்துடன், 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இத்தருணத்தில் நாம் அன்னிய நாட்டு பொருட்களை சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதே பொருட்கள் உள்நாட்டில் கிடைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தரமான பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும்.
திறமை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய வற்றுக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கிறது. புதுமையான தொழில்களை செய்யும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் நாள்தோறும் டஜன் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. அரசு நடைமுறை அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது.
தற்சார்பு இந்தியா கொள்கை தான் எதிர்கால பிரச்னைகளுக்கு தீர்வு. ஜெயின் சர்வதேச வர்த்தக நிறுவன இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் செலவில்லாத இயற்கை விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதுபோல உணவு பதப்படுத்துதல், வேளாண் தொழில்நுட்பம், மறுசுழற்சி முறை, ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளிலும் முதலீடு செய்யலாம்.
மத்திய அரசு ‘ஜிஇஎம் இ – மார்க்கெட் பிளேஸ்’ என்ற வலைதளத்தை இயக்கி வருகிறது. இதில், 40 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வலைதளம் வாயிலாக தொலைதுாரத்தில் உள்ள கிராம மக்கள், சிறிய கடை வைத்திருப்போர், சுய உதவிக் குழுவினர் தங்கள் பொருட்களை சுலபமாக விற்பனை செய்ய முடியும்.
இன்று உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை உற்று நோக்குகின்றன. இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை தரக் கூடிய விஷயமாகும்.
உலக அமைதிக்கும், வளத்திற்கும் இந்தியா பாடுபட்டு வருகிறது.பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண்கிறது. இந்தியாவின் இந்த முன்னேற்றங்களை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதில் பலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால், புதிய இந்தியாவின் விடியல் நம் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.




