
தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2020-ல் கொரோனா பிரச்சினை வந்தவுடனேயே, தொற்று பரவல் காரணங்களுக்காக, பயணிகளுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது..
அதன் பிறகு, கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியதும், மறுபடியும் ரயில்கள் இயங்கத் தொடங்கின. ஆனால் பயணிகளுக்கான நிறைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, ரிசர்வேஷன் பெட்டிகள், உணவு டெலிவரி, ஏசி பெட்டிகளில் படுக்கை வசதி போன்றவை தொடங்கப்படாமல் இருந்தன. கடைசியாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஏசி பெட்டிகளில் ஸ்க்ரீன்கள், படுக்கை விரிப்புகள் போன்றவை உடனடியாக ஆரம்பமாகும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த பணிகள் தற்போது மெல்ல மெல்ல நடந்து வரும் நிலையில், மற்றொரு இனிப்பு செய்தியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, விரைவில் 70 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்படுத்த முடிவாகி உள்ளதாம். அன்னையர் தினத்தை ஒட்டி இப்படி ஒரு செம அறிவிப்பை தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயில், “லக்னோ மெயில்” ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான சீட் தயாரிக்கப்பட்டுள்ளது.. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க, சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.
தாயின் சீட்டை ஒட்டியே குழந்தைக்கான சீட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு, ரயில் பயணியர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை பார்த்ததுமே மற்ற கோட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, “முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது..
அதன்படி, தெற்கு ரயில்வேயில் நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் ஏசி முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் துவங்க உள்ளோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் நிச்சயம் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.. காரணம், இரவு நேர பயணங்களில் குழந்தையை மடிமேல் படுக்க வைத்து, மிகுந்த சிரமத்துக்கு விடிய விடிய ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
அதேசமயம் ஏசி பெட்டிகள் என்றில்லாமல், ரிசர்வ் செய்யப்பட்ட அனைத்து பெட்டிகளுக்கும் இந்த வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால், உபயோகமாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.




