மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மக்கள் நல பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடைகோரிய மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க முதலில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. குறிப்பாக, இந்த தடைகோரி விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் மறுவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழகத்தில் சுமார் 13,500 மக்கள் நல பணியாளர்களில் 1,800 பேர் இறந்துவிட்டனர். அதில் 7,000 பேர் 53 வயதை கடந்துவிட்டனர்.
1,500 பேர் 47 வயதை கடந்துவிட்டனர். மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை, ஏற்கெனவே மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அட்டவணையை விட மிக குறைவு. ஒன்றிய மாநில அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நல பணியாளர்களுக்கு பின் ஊதியம் அல்லது வழங்கப்பட வேண்டிய ஊதியம் தற்போது மாநில அரசு ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதஊதியம் ரூ.7,500 உடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணி அமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருதா போத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா பத்மநாபன், இந்த மனுவை தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை, இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம். எனவே இந்த மனு மீது தடை விதிக்கமுடியாது; இதில் எவ்வித அரசியலும் இல்லை என கூறினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நீண்ட காலம் பணியில் இல்லாத மக்கள்நல பணியாளர்களுக்கு, தமிழக அரசு பணி வழங்க முன்மொழிவை அறிவித்துள்ளது.
எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டாம் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பெற்ற நீதிபதிகள், தமிழக அரசின் முன்மொழிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், அரசின் முன்மொழிவை மறுத்து பணியை ஏற்காதவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.





