வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக இம்மாதம் 3-ஆம் தேதி தொடங்கி, பத்து நாள்கள் நடைபெற்றது.
விழாவின் பத்தாம் நாள் நிறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது.
பின்னர் மகா தீபாராதனை ஆகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் வைகாசி விசாகத்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இதனால் நிகழாண்டில் விசாகத்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட மினிலாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் உருவ படத்தை வைத்து பாதயாத்திரையாக பக்தர்கள் மிக அதிகளவில் திருச்செந்தூர் வந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலில் பாதுகாப்பு வளையம் அமைத்து கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்நது சுவாமி ஜெயந்தி நாதர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளுளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் நிகழ்ச்சி நடந்தது.
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.







