நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேசிய சிந்தனை பேரவை அமைப்பின் சார்பில் வீரவாஞ்சி தியாக ஜோதி ஓட்டம் ஜூன் 17 அன்று சிறப்பாக நடைபெற்றது.
1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி அன்று, சுதேசிய தலைவர்களை கொடுமைப் படுத்திய அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் என்பவரை வீர இளைஞர் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று, தானும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்தார். அவருடைய உயிர்த் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம் செய்து கொண்ட மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையம் என்று பெயர் சூட்டப் பட்டது.
இதை முன்னிட்டு, திருநெல்வேலி தொடங்கி வாஞ்சி மணியாச்சி வரை, கல்லூரி மாணவர்களான இளைஞர்களைக் கொண்டு தியாக ஜோதி தொடர் ஓட்டம் நடத்த திருநெல்வேலி தேசிய சிந்தனைப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்த நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பிருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. லட்சுமி ராமன் பள்ளி தாளாளர் அனந்த ராமன் கொடியசைத்து தியாக ஜோதி தொடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். வீரவாஞ்சியின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் தியாக ஜோதி தீபத்தை ஏற்றி வைத்தார்.
திருநெல்வேலி விவேகானந்த வித்யாஷ்ரம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பன்னிருபடி ஐயன் கல்லூரி மாணவ மாணவிகள் ஜோதியை ஏந்தி வந்தார்கள். ஜோதி தொடர் ஓட்டம் சென்ற கிராமங்களில் மக்கள் கூடி நின்று, வரவேற்பு அளித்து மகிழ்ந்தார்கள். அக்கா நாயக்கன்பட்டி ஊர்b பொதுமக்கள் சார்பில் ஜோதி கொண்டு வந்திருந்த மாணவ மாணவியர்க்கும், விழாக் குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முற்பகல் 10.30 மணி அளவில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த தொடர் ஜோதி ஓட்ட மாணவர்களை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றார்கள். ரயில் நிலையத்தை அடுத்து உள்ள வீரவாஞ்சிநாதன் நினைவு மண்டபம் தேசிய சிந்தனை பேரவையால் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசி சுற்றிலும் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற்றது.
ரயில் நிலையம் மற்றும் வாஞ்சி மணியாச்சி மண்டபத்தில் வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விவேகானந்த வித்யாஷ்ரமம் பள்ளி தாளாளர் திருமாறன், சித்த மருத்துவர் ராஜசேகர், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஜெயசேகரன், ஆசிரியர் வெங்கட்ராமன் மற்றும் பல தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் வெங்கட்ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் இந்த நினைவஞ்சலி மற்றும் தியாக தீபம் தொடர் ஓட்ட நிறைவு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மூத்த பத்திரிக்கையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், வாஞ்சிநாதனின் வாழ்க்கைச் சம்பவத்தைப் பற்றிய நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக, மாணவர்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்தார்.
தேசிய சிந்தனைப் பேரவையின் தலைவர் வெங்கடாசலபதி நன்றியுரை நிகழ்த்தினார். தேச பக்தர்கள் பலர் கலந்துகொண்டு வீர வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள். விழா ஏற்பாடுகளை தேசிய சிந்தனைப் பேரவை தலைவர் வெங்கடாசலபதி, செயலாளர் ராம்பாபு, சந்திர பிரபாகர், ராஜபாண்டி, முருகப்பெருமாள், ராகுல், ஆறுமுகக்கனி, சங்கர் மகாதேவன் உள்பட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
வாஞ்சி நினைவு நாளை முன்னிட்டு, அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ராஜாளி ஜெயப்ரகாஷ், திருநெல்வேலி மாவட்ட அமுக., தலைவர் முத்துராமன் மற்றும் அவருடைய அமைப்பினர் புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பாஜக., மற்றும் சில அமைப்பினர் சார்பிலும் வாஞ்சி உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப் பட்டது.
திருநெல்வேலி ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.