மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சாங்லி காவல் துறை கண்காணிப்பாளர் தீக்ஷித் கூறுகையில், ஒரு வீட்டில் 9 சடலங்களைக் கண்டெடுத்துள்ளோம். வீட்டிலேயே 3 சடலங்கள் ஒரு இடத்திலும், மீதமுள்ள 6 சடலங்கள் மற்றொரு இடத்திலும் இருந்தன என்றார்.
உயிரிழப்புக்குக் காரணம் தற்கொலையா என அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “சம்பவ இடத்தில் காவல் துறையினர் உள்ளனர். அவர்களது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்” என்றார். மற்றொரு காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும். உயிரிழந்தவர்கள் விஷத்தன்மையுடைய பொருளை உட்கொண்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.





