
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.இந்த சதுர்த்தி விழாவில் மணி அடித்தபடி விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்தது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.
இதற்காக வளர்ப்பு யானைகள் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர் சந்தனம் மூலம் வளர்ப்பு யானைகளை பாகன்கள் அலங்கரித்தனர். ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடினர். பின்னர் புலிகள் காப்பக துணை இயக்குனர் திவ்யா முன்னிலையில் முகாம் வளாகத்தில் உள்ள கோவிலில் விநாயகருக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கையில் வைத்திருந்த மணியை அடித்தபடி கோவிலை வலம் வந்தது. பின்னர் விநாயகருக்கு மரியாதை செய்யும் வகையில் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டபடி வணங்கியது. இதைத்தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கரும்பு, தேங்காய், வெல்லம், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழங்களை வனத்துறையினர் யானைகளுக்கு வழங்கினர். இதேபோல் ராகி, கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளும் அளிக்கப்பட்டது.





