
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சப்பரம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெரு வளைவில் சப்பரத்தை திருப்பிய போது மரத்தின் மீது மோதி நின்றது. இதனையடுத்து சப்பரத்தை இடது புறம் திருப்பியபோது அங்கிருந்து விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்து மின்சாரம் தாக்கியது. இதில் விளம்பர பலகையை பிடித்திருந்த 5 பேர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிவகிரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்த 5 பேரில் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக சேத்துர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




