சென்னை கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கொலை வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார்.
மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில், அவரது தந்தை மாணிக்கம் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
சத்யாவை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த மாணவன் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




