சென்னை:
இன்றைய அரசியல் காட்சியின் ஓர் அங்கமாக, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக., தலைவர் கருணாநிதியை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து சந்தித்தார்!
வரும் பிப்.21 அன்று தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார் நடிகர் கமலஹாசன். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து, தனது மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை திடீரென திமுக தலைவர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் கமல்ஹாசன். பின் அவரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தனது அரசியல் பயணத்திற்கான ஆசி பெறவும், மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் வந்ததாக பின்னர் செய்தியாளர்கள் மட்டத்தில் தெரிவித்தார். அப்போது, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, கருணாநிதியுடன் பேசும்போது உதவினார். அதன் பின்னர் காவிரி விவகாரத்தில் கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு கமலுக்கும் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.
இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஸ்டாலின் காவிரி விவகாரத்திற்கு கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார். கட்சி துவங்காத கமலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின். மேலும், கட்சியாகக் கருதாத அதிமுக.,வுக்கும், எதிரிக் கட்சியாகக் கருதும் பாஜக.,வுக்கும் திமுக., சார்பில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவையும், இன்று பிற்பகல் நடிகரும் தனது நண்பருமான ரஜினிகாந்த்தையும் கமல் சந்தித்தார்.