சென்னை: சென்னை பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் ரிவர்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து மோதி ஓட்டுநர் ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமூர்த்தி (35). இவர், சென்னை பல்லவன் சாலை பஸ் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு வேலை முடிந்ததும், குளிப்பதற்காக பணிமனையில் உள்ள குளியலறைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே அரசு விரைவு பஸ் ஒன்றுக்கு ‘டீசல்’ பிடிக்கப்பட்டது. டீசல் நிரப்பப்பட்ட நிலையில், அந்த பஸ்ஸை அதன் ஓட்டுநர் பின்நோக்கி ‘ரிவர்ஸ் கியரில்’ இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக நல்லமூர்த்தி மீது பஸ் மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்த பணியாளர்கள் மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நல்லமூர்த்தி உயிரிழந்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி ஓட்டுநர் பலி
Published:

