கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த அணியாக வலம் வரும் தென்னாப்பிரிக்க அணி, நேற்று இந்திய அணியிடம் படு தோல்வி அடைந்தது. மோசமான இந்தத் தோல்வியால், தங்கள் தன்னம்பிக்கை தகர்ந்து விட்டதாக தென்னாப்பிரிக்க அணி தலைவர் டிவிலியர்ஸ் சோகத்துடன் கூறியுள்ளார். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், நாங்கள் முக்கியமான ஒரு போட்டியில், 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதை எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்தத் தோல்வியை நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது. டாஸ் வென்றது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ஒரு கட்டத்தில் இந்தியா 350க்கு மேல் ரன்களைக் குவித்து விடும் என நினைத்தேன். ஆனால் எங்கள் பவுலர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாகப் பந்து வீசி அதிக ரன்கள் எடுப்பதைக் கட்டுப்படுத்தினார்கள். அதுபோல், போட்டியின் கடைசிப் பந்து வரை எங்கள் அணி போட்டியில் இருந்து விலகிச் சென்றுவிடாமல் எங்கள் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் இப்படி மொத்தமாக இந்தியாவின் ஆதிக்கத்தில் சரணடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், இந்தத் தோல்வியின் மூலம் தன்னம்பிக்கை தகர்ந்து விட்டது. எங்கள் அணியின் மோசமான பேட்டிங்கும், இந்தியாவின் திறமையான பவுலிங்கும்தான் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்குள்ளாக்கியது. தான் ஆட்டம் இழந்த பிறகு ஹசிம் ஆம்லா இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்ததாக என்னிடம் கூறினார். குறிப்பாக, 300க்கு மேலான ஒரு இலக்கைத் துரத்தியபோது, இரண்டு ரன் அவுட்களால் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. நானும், டேவிட் மில்லரும், எந்தப் பந்து வீச்சாளராலும் ஆட்டம் இழக்காமல், ரன்-அவுட்டுகளால் பெவிலியன் திரும்பியதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தியர்கள் சிறப்பாக பீல்டிங் செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை, ஆனால் விக்கெட்டுகளுக்கு நடுவிலான ஓட்டத்தில் நாங்கள்தான் தவறு செய்துவிட்டோம். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்துகளை சிறப்பாக அடித்து ஆடக் கூடியவர்கள். அப்படியிருந்தும் இந்தியாவின் பவுன்சர் பந்து வீச்சுத் தாக்குதலில் தடுமாறியதற்கு பிட்சும் ஒரு காரணமாக இருந்தது என்று டிவில்லியர்ஸ் இந்தப் போட்டி குறித்த தனது கருத்தைத் தெரிவித்தார்.
இந்திய அணியிடம் தோல்வி: தன்னம்பிக்கை தகர்ந்துவிட்டதாக டிவில்லியர்ஸ் சோகம்
Popular Categories


