சென்னை: அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று (28.02.2015) தாக்கல் செய்துள்ளார். இதில், திறன் மேம்பாட்டு அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் கிராமப் புற மாணவர்களும் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் – இந்திய மாணவர்கள் உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் சென்று பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் உட்பட்ட 5-மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்படுவதால் – கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதுடன். ஒரே மாதிரியான பாடத்திட்டதினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதால் அந்நிய முதலீடு அனைத்து துறைகளுக்கும் கிடைக்கும்.இதனால்,வேலைவாய்ப்பு பெருகுவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உயரும். வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது அரசு ஊழியர்களுக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்க்க் கூடியதாகும். அதேவேளையில், சொத்து வரியை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றோம். மேலும் பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டகளுக்கு 100 சதவீதம் வரி விலக்கு என்ற அறிவிப்பால், பெண் குழைந்தைகளுக்கு எதிரான மனோபாவம் குறையும். பொதுவாக, இந்த நிதி நிலை அறிக்கையால் அனைத்து தரப்பட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள். மேலும், பொதுமக்களுக்கு சுமையை ஏற்றாத-அதிக வரி இல்லாத பட்ஜெட் என்பதனால், இதனை முழுமையாக வரவேற்கின்றேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.

